மனித வாழ்வியலைப் புரட்டிப்போட்டு மனிதச் சிந்தனைக்கு அடுத்த அத்தியாயம் எழுதியவர்
சாதனையாளர்
இயற்கை விஞ்ஞானி
`சார்லஸ் டார்வின்'.
பிப்ரவரி – 12 – 1809 -
மனிதப் பரிணாம வளர்ச்சியை
உலகுக்கு உரைத்த
டார்வின் – 216 - வது பிறந்தநாள்.
`பரிணாமம் என்பது கோடிக்கணக்கான காலச் சுழற்சிக்கு இடையே நிகழ்வது. குறிப்பிட்டு நோக்கும் அளவுக்கு நிகழக் கூடியதல்ல’ - டார்வின்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். பிப்ரவரி. 12. –
டார்வினின் இயற்கை
தேர்வுக் கோட்பாடு
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தற்பொழுது இருப்பது போன்றே உருவாகவில்லை. அவை தோன்றும்பொழுது ஏதேனும் ஓர் அமைப்பில் உருவாகியிருக்கலாம். காலவெளியில் பல சிக்கலான வடிவங்களைக் கடந்து, தற்போது தனக்கெனத் தனித்துவமான இருப்பை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.
இந்நிலையை இயற்கைப் போராட்டத்தின் விளைவு என்று வெளிப்படுத்துகிறது டார்வினின் இயற்கை தேர்வுக் கோட்பாடு.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் இயற்கை உயிர்களிடத்தில் அதனை நிலைநிறுத்திக்கொள்ளப் பல நிர்பந்தங்களை விதிக்கிறது.
அந்தந்த நிலைக்குத் தன்னை தகவமைத்துக்கொள்ளும் இனம் அடுத்தகட்டத்துக்குப் பரிணமிக்கிறது.
உடலமைப்பில் மாற்றம்,
இனப்பெருக்க உடற்கூறுகள்
முறையான சந்ததிப் பரிமாற்றம்
போன்ற அம்சங்கள் உயிரினை தக்கிப் பிழைக்க வைக்கிறது.
இந்தப் பண்புகள் இல்லாமல் பரிணாமம் பெறாத சூழ்நிலைகளை வெல்ல முடியாத உயிர்கள் மறைந்துபோகின்றன.
அறிவியல் கோட்பாடுகளும், உருவாக்கமும் வெறும் கண்டுபிடிப்பு என்ற நிறைவோடு முடிந்துவிடுவதில்லை.
வரலாற்றில் ஆதிக்கம் செலுத்துகிறது; நியதிகளை உடைத்தெறிகிறது; சமூகத்தில் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
வரலாற்றைச் சுழலவைத்த சக்கரம் முதல் வாழ்வை அச்சுறுத்தும் அணு ஆயுதங்கள் வரை உதாரணங்கள் சொல்லலாம்.
அந்த வகையில்
மனித வாழ்வியலைப் புரட்டிப்போட்டு மனிதச் சிந்தனைக்கு அடுத்த அத்தியாயம் எழுதியவர் `சார்லஸ் டார்வின்'.
மேற்சொன்ன அவரின் இயற்கைத் தேர்வு கோட்பாடு, இயற்கை அளித்த பரிணாமத்தின் வெளிப்பாடு!
டார்வினின் தாத்தா ஓர் இயற்கை விஞ்ஞானி. அப்பா மருத்துவர். தன் மகனை மருத்துவராக்க வேண்டும் என்று டார்வினின் தந்தை எவ்வளவோ முயன்றும் டார்வினுக்கு இயற்கை சார்ந்தே ஆர்வமே இருந்தது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
ஒவ்வோர் உயிரையும் நோட்டமிடுவார், வீட்டுக் கட்டிலுக்கு அடியில் எலிகளை வளர்த்தார். பூச்சிகள், கடல் சங்கு போன்றவற்றைச் சேகரித்தார்.
தந்தையின் மருத்துவக் கனவு டார்வினால் கலைக்கப்பட்டது. பிறகு, மகனைப் பாதிரியாராக்க முடிவெடுத்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்த்துவிட்டார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் டார்வினின் ஆர்வத்துக்கு ஏற்ற இடமாக அமைகிறது.
தாவரவியல்,
விலங்கியல்,
நிலவமைப்பு
என்று அனைத்தையும் கற்றார்.
தாவரவியல் பேராசிரியர் ஜான் ஹென்ஸ்லோவின் (John Henslow) நெருங்கிய நண்பரானார்.
டார்வின் வாழ்வின்
திருப்புமுனை
எண்ணங்கள் தேங்கி நிற்கும் பொழுது, புதிய தேடலுக்கு மூளையையும், புதிய அனுபவத்துக்கு மனதையும் விசாலப்படுத்துகிறது பயணம். அப்படிப்பட்ட பயணம்தான் டார்வின் வாழ்வின் திருப்புமுனை.
இயற்கை அமைப்பு சார்ந்து
ஆராய்ச்சி செய்ய
`எச்.எம்.எஸ். பீகிள்'
என்ற கப்பலை தென் அமெரிக்க நாடுகளுக்கு அனுப்பியது பிரிட்டன்.
கேப்டன் Robert Fitzroy
தனக்கு உதவியாக
இயற்கை விஞ்ஞானி
வேண்டும் எனக் கேட்க, ஹென்ஸ்லோவின் பரிந்துரையில் அந்தப் பயணத்தில் இணைந்தார் டார்வின்.
தென் அமெரிக்காவில் பார்த்த
தீக்கோழி இனம்,
கால்பகாஸ் தீவில் பார்த்த
ஆமையினம்,
அர்ஜென்டினாவில் பார்த்த
தேவாங்கு
போன்ற புதைப்படிவம்
ஒவ்வொன்றும் டார்வினுக்கு அச்சர்யங்களைக் கொடுத்தன.
கிட்டத்தட்ட அனைத்தும் மற்ற இடங்களில் நாம் பார்க்கும் அதே இனத்தோடு ஒத்துப்போயிருந்தன. சூழலால் அவை உடலளவிலும் செயலளவிலும் பலவாறு மாறுபட்டிருந்தன.
5 ஆண்டுகளில் 3,200 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து 5,000-க்கும் மேற்பட்ட உயிரின மாதிரிகள், எலும்புகள், புதைப் படிவங்களைச் சேகரித்தார் டார்வின்.
அதற்கிடையேயான மரபு ஒற்றுமை, உடலியல் வேறுபாடு அனைத்தும் டார்வினுக்கு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வைத்தது.
உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டவர் ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ். அவரும் தன்னைப்போல் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை வரையறுத்துள்ளார் என்பது டார்வினுக்குத் தெரிய வருகிறது.
பரஸ்பரம் இருவரும் சேர்ந்தே தங்கள் ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர்.
1859-ம் ஆண்டு உலகப்புகழ் பெற்ற
உயிரினங்களின் தோற்றம்
(The Origin of Species)
புத்தகம் வெளியிடப்படுகிறது.
ஆன்மிகவாதிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார் டார்வின்.
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால், ``இப்போதுள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறவில்லை?", ``தற்பொழுது ஏன் பரிணாமங்கள் நிகழ்வதில்லை?"
போன்ற கேள்விகள் இன்றுவரை எழுப்பப்படுகிறன.
அறிவுத் தளங்களிலேயே குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற கருத்தாக்கம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
டார்வின் அப்படி என்றும் சொல்லவில்லை. மாறாக, மனிதனும் குரங்கும் ஒத்த, வேறு பொது இனத்திலிருந்து தோன்றியவை என்றே குறிப்பிட்டுள்ளது. மனிதனுக்கும் மனிதக் குரங்குக்கும் மிகத் துல்லியமான மரபு வித்தியாசமே காணப்படுகிறது.
`பரிணாமம் என்பது கோடிக்கணக்கான காலச் சுழற்சிக்கு இடையே நிகழ்வது. குறிப்பிட்டு நோக்கும் அளவுக்கு நிகழக் கூடியதல்ல’ என்கிறார் டார்வின்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆன்மிக நம்பிக்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்த காலத்தில், டார்வின் கோட்பாடு ஆன்மிகத்தையே கேள்விக்குறியாக்கியது.
யூதம்,கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் கடவுள் படைத்த முதல் மனிதன் ஆதம் என்ற ஒரே ஆதி கோட்பாட்டையே பெற்றுள்ளன. அந்த வகையில், தங்கள் நம்பிக்கைக்கு மாறாக டார்வினியம் உள்ளதாக எதிர்க்கிறார்கள்.
---------------------------------------------------------.