குழந்தைகள் சுதந்திரத்தை சூறையாடும்
இயற்கைக்கு முரணான எந்த வேலையும் குழந்தைகளை தொழிலாளர்களாக்குகிறது.
இதன் மூலம் பள்ளியில் சேர்வதற்கான
வாய்ப்பை அவர்கள் இழக்கிறார்கள்.
அதனால் அவர்களின் பள்ளிப்படிப்பு தடைப்படுகிறது.
ஜூன் – 12
குழந்தைத் தொழிலாளர் முறைக்கு
எதிரான உலக தினம்
(World Day against Child Labour)
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜுன். 12. –
வறுமை,
கல்வியறிவின்மை,
வேலையின்மை,
சமூக சமத்துவமின்மை
மற்றும்
விழிப்புணர்வு இல்லாமை
ஆகியவற்றிலிருந்து குழந்தைத் தொழிலாளர் முறை உருவாகிறது.
உலக குழந்தைத் தொழிலாளர்
எதிர்ப்பு தினத்தின்
கருப்பொருள்-2025:
முன்னேற்றம் தெளிவாக உள்ளது, ஆனால் இன்னும் செய்ய வேண்டியது உள்ளது: முயற்சிகளை விரைவுபடுத்துவோம்!
( Progress is clear, but there's more to do:
let's speed up efforts!)
“Universal Social Protection to End Child Labour" "குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க உலகளாவிய சமூகப் பாதுகாப்பு"
என்ற பெயரில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துகிறது.
குழந்தை தொழிலாளர்கள் முறை இந்த உலகின் மிகப்பெரிய சோகம்.
குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது உலகின் மிகப்பெரிய சட்ட விரோதச் செயல்.
அது இயற்கைக்கு முரணான ஒரு சமூகக் குற்றம்.
பகட்டாக ஜொலிக்கும் உலகின் களையப்படாத கீழ்மைகளுள் ஒன்று.
குழந்தைகளின் கனவுகளை களைப்பதற்கு ஈடான வன்செயல் எதுவும் இல்லை.
ஜூன் 12-ம் தேதி கடைபிடிக்கப்படும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினம் (World Day Against Child Labour), ஜூன் 10-17 வரையிலான ஒரு வார காலப்பகுதியை சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) மற்றும் யுனிசெஃப் இணைந்து உலகளாவிய அளவில் குழந்தைத் தொழிலாளர் மீதான போக்குகள் மற்றும் 2022ற்கான செயல் உறுதிமொழிகள் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பை வழங்கும் ஒரு சிறப்பு வாரமாக “Week of Action” என்ற கருப்பொருளில் கொண்டாடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி,
அரசாங்கங்கள்,
தொழிலாளர் அமைப்புகள்,
நிறுவனங்கள்,
தொழில் வழங்குனர்,
மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஒன்றிணைத்து குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையையும், அவர்களுக்கு உதவ என்ன செய்ய முடியும் என்பதையும் எடுத்துக் காட்டும் பொருட்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டாக இணைந்து 2002-ல் இத்தினத்தை உருவாக்கியது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
குழந்தைத் தொழிலாளர்களை
"குழந்தைப் பருவத்தை
இழந்த குழந்தைகள்”
என்று குறிப்பிடுகிறது.
அவர்களின் ஆற்றல் மற்றும் சுய கௌரவத்தை இழந்து, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் செயல்" என்று இதை வரையறுக்கிறது.
குழந்தைகள் செய்யும் அனைத்து வேலைகளும் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் வராது. அதாவது குழந்தையின் நேர்மறையான வளர்ச்சிக்கு பங்களித்து அவர்களை சமூகத்தில் ஒரு சிறப்பான குடிமகனாக மாற்றுவதற்கான திறன்களையும் அனுபவத்தையும் வழங்கும் செயல்பாடுகள் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற கட்டத்துக்குள் அடங்காது.
அப்படியாயின் யார் குழந்தை தொழிலாளர் என்றால்,
ஒரு குழந்தையின் உள, உடல் வளர்ச்சியை பாதிக்கும், அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும், அவர்கள் சுதந்திரத்தை சூறையாடும் இயற்கைக்கு முரணான எந்த வேலையும் குழந்தைகளை தொழிலாளர்களாக்குறது.
இதன் மூலம் பள்ளியில் சேர்வதற்கான வாய்ப்பை அவர்கள் இழக்கிறார்கள். அதனால் அவர்களின் பள்ளிப்படிப்பு தடைப்படுகிறது.
குழந்தை தொழிலாளர்களின் உச்சகட்ட கொடூரம் அவர்களை பெற்றோரிடம் இருந்தும் குடும்பங்களிடம் இருந்தும் பிரித்து, அவர்கள் ஆற்றலுக்கு ஆயிரம் மடங்கு அதிகமான வேலைப் பளுவை திணித்து, அவர்களை பெரு நகரங்களில் சிறு விலைகளுக்கு போதைப்பொருள் கடத்தல், விபச்சாரம், தீவிரவாதம் போன்ற பல சமூக விரோத செயல்களுக்காக விற்கப்படுவதும் ஆகும்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கையின் வீழ்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டாலும், சமூக-பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும் COVID-19 தொற்றுநோய் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையை 20 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக இன்னும் பல மடங்காக அதிகரித்துள்ளது. வருமான குறைவு, மூடப்பட்ட பள்ளிகள் போன்ற காரணங்களால் வறுமையில் வாடும் குடும்பங்கள் உணவு மற்றும் அடிப்படை தேவைகளை சமாளிக்க குழந்தைகளை வேலைக்கு அனுப்ப ஆரம்பித்து உள்ளனர்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின் படி உலகெங்கிலும், 5 முதல் 17 வயது வரையிலான சுமார் 153 மில்லியன் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர்.
இதில் 73 மில்லியன் பேர் அபாயகரமான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
உலகின் ஏழ்மையான நாடுகளில்,
நான்கு குழந்தைகளில் ஒருவர்
தங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
குழந்தைத் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதி (72 மில்லியன்) ஆப்பிரிக்காவில் காணப்படுகிறார்கள்.
அங்கு 5 குழந்தைகளில் ஒரு குழந்தை தொழிலாளராக வேலை செய்கிறது. குழந்தை தொழிலாளர் வளர்ந்து வரும் கிழக்காசிய, ஆப்பிரிக்கா நாடுகளில் மட்டுமல்லாது நன்கு வளர்ச்சி அடைந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கூட மிகப் பெருமளவில் காணப்படுகிறது
என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.
ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான குழந்தைப் பருவத்திற்கும், பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புக்கும் தகுதியானவர்கள்.
ஆனால் குழந்தை தொழிலில் ஈடுபடும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இந்த அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது.
2025-க்குள் குழந்தை தொழிலாளர்கள் முறை முற்றாக ஒழித்துவிட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் இது எவ்வளவு தூரம் சாத்தியமான ஒன்று என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
குழந்தை தொழிலாளர்கள் முறை அடியோடு வேரறுக்க வேண்டும் என
தன்னார்வலர்களும், குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான
உலகளாவிய அமைப்புகளும்
(The Global March Against Child Labour),
ACE, Save the Children)
பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தை அடிமைத்தனம், கடத்தல், துஷ்பிரயோகம் போன்றவற்றை முற்றாக தடுப்பதற்கும், சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கும், அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இலவச கல்வியை கிடைக்கச் செய்யவும் இவ்வமைப்புகள் பாடு பட்டாலும், ஒவ்வொரு தனி நபரின் ஒத்துழைப்பும் இல்லாமல் இது சாத்தியப்படாது.
எப்படி குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகிறார்கள்?
குழந்தை தொழிலாளர்கள் இரண்டு வகையில் உருவாகுகிறார்கள்.
வறுமை,
கல்வி அறிவின்மை காரணமாக பெற்றோர், பாதுகாவலர்கள் தம் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது, அல்லது ஏஜென்ட்டுகளிடம் குறைந்த விலைக்கு விற்பது ஒரு வகை. இரண்டாவது வகை குழந்தை கடத்தல். உலகின் இருண்ட அறைக்குள் பணம் கொழிக்கும் வணிகமாக மாறிவிட்ட குழந்தை கடத்தலில் மில்லியன் கணக்கான குழந்தைகள் குழந்தை தொழிலாளராக விற்கப்படுகிறார்கள்.
இன்று வரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத ஒரு துயரமாக இது தொடர்ந்து கொண்டிருப்பதற்கு,
அரசாங்கங்கள் இலவச மற்றும் அனைவராலும் அணுகக்கூடிய கல்வியை வழங்க தவறியமை,
சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் மரபுகள் முறையாகக் கடைபிடிக்காமை,
குழந்தைகளின் உரிமைகள் மதிக்கப்படாமை,
மக்களின் அலட்சியப் போக்கு
என்று பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
திரையில் நிழல் உலக ஹீரோக்கள் இவ்வாறான ஒரு சம்பவத்தை தட்டிக் கேட்கும் போது உணர்ச்சிவசப்பட்டு கை தட்டும் மக்கள்,
படம் முடிந்து வெளியே வந்து சுண்டல் விற்கும் சிறுவனிடம் பேரம் பேசி சுண்டல் வாங்கி செல்கிறார்கள்.
எத்தனை பேர் அந்தச் சிறுவன் ஏன் பாடசாலை போகாமல் இப்படி வேலை செய்கிறான் என்று தேடி, தீர்வு காண்கிறார்கள்?
வீதியில் போகும்போது யாசகம் கேட்கும் குழந்தைகளை புறக்கணித்து செல்கிறோமே தவிர அவர்களுக்கான மறுக்கப்படும் உரிமைகளுக்காக குரல் கொடுக்க எவருமே நினைப்பதில்லையே? இந்த அலட்சியப் போக்கால் ஒரு சமூகமாகவும் நாம் நம் குழந்தைகளை பாதுகாக்க தவறி விடுகிறோம்.
குழந்தை தொழிலாளர் தான் உலகிலேயே மிகவும் மலிவான மனித வளம். பல நேரங்களில் அது இலவசமாக கிடைத்து விடுகிறது.
உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களின் உற்பத்தியில் பெரும்பாலான குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
உலகளாவிய நுகர்வோர் மலிவான தயாரிப்புகளை கோருகிறார்கள். முதலாளிகள் மலிவான உழைப்பிலிருந்து அதிக லாபம் ஈட்டுகிறார்கள்.
வேகமாக வளர்ந்து வரும் நாகரீக உலகத்தின், அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனங்களுக்கு மலிவான மனித உழைப்பு தேவைப்படுகிறது.
அது குழந்தை தொழிலாளர் வடிவில் இலவசமாகவே கிடைக்கிறது.
தற்போது பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் குழந்தை தொழிலாளர் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை சமூகப் பொருப்போடு உறுதிப்படுத்துகிறார்கள்.
உதாரணத்திற்கு
மெர்சிடிஸ் பென்ஸ் அதன் விநியோகச் சங்கிலியின் ஆரம்பப் புள்ளியில் இருந்து கடைசி புள்ளி வரை குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை தம் சப்ளையர்களிடம் போடும் ஒப்பந்தத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறது.
விநியோக சங்கிலியில் ஏதோ ஒரு மூலையில் ஒருவர் விதிகளை மீறினாலும் வர்த்தக ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்து அந்த மொத்த சங்கிலியையும் துண்டித்து விடுகிறார்கள்.
இது போன்ற பல நல்ல மாற்றங்கள் வரத் தொடங்கினாலும், இன்று வரை உலகின் எல்லா இடங்களிலும் நெருக்கடியான தொழிற்சாலைகளில், எந்த அடிப்படை வசதியும் இல்லாமல், துஷ்பிரயோகங்களுக்கு ஆளான படி, பல கோடிக் குழந்தைகள் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
வயல்களிலும், சுரங்கங்களிலும் பல லட்சம் குழந்தைகள் வியர்வை சிந்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.
இது ஒரு காட்டுத்தீ. இளம் தளிர்கள் மேல் பற்றிக்கொண்ட இந்தத் தீ மெல்ல மெல்லப் பரவி, எதிர்கால உலகையே எரித்து சுடுகாடாக மாற்றிவிடும்.
ஒரு சமூகமாக அரசும், நிறுவனங்களும், மக்களும், சட்டமும் ஒன்றிணைந்து செயல்பட்டாலே ஒழிய இதனை அணைக்க வேறு வழி இல்லை.
எந்தக் குழந்தையும் விரும்பி வேலைக்கு செல்வதில்லை. அவர்கள் பலவந்தமாக இந்தச் சுழலுக்குள் தள்ளப்படுகிறார்கள். இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பாக வளர, சுதந்திரமாக வாழ, தரமான கல்வி கற்க உரிமை உள்ளது.
அது எந்தக் காரணத்திற்காகவும் பறிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்.
இன்றைய குழந்தைகள்தான் நாளைய உலகை கையில் எடுத்துக் கொள்ளப் போகிறவர்கள். அவர்கள் இன்று எப்படி நடத்தப்படுகிறார்களோ அதன் எதிரொளிப்பு தான் நாளை வெளிப்படப்போகிறது. எனவே எதிர்கால உலகை அவர்கள் நேர்மறையாக அணுக வேண்டுமா, இல்லை எதிர் மறையாக மாற்ற வேண்டுமா என்பதை இன்று நாம் தான் தீர்மானிக்கப் போகிறோம்.
உங்கள் கண் முன்னே
ஒரு குழந்தை
அதன் சுதந்திரத்தை இழந்து
நிற்குமாயின்
அங்கு உங்கள் மௌனம்
களையட்டும்!
-------------------------------------------.