2021ஆம் ஆண்டு
புள்ளிவிவரங்களின்படி
இந்தியாவில் தைராய்டு நோய் உடையவர்களின் எண்ணிக்கை
4.2கோடி பேர்
மே – 25 –
உலக தைராய்டு தினம்
World Thyroid Day
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். 25. –
ஒவ்வோர் ஆண்டும் தைராய்டு மற்றும் அதற்கான சிகிச்சை குறித்துப் புரிந்து கொள்ள உலகளவில் மே 25ஆம் தேதி தைராய்டு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் உடையவர்களாக உள்ளனர்.
தைராய்டு என்றால் என்ன?
மனிதர்களின் உடலிலுள்ள கழுத்துப் பகுதியில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பியே தைராய்டு. இந்த சுரப்பியில் இருந்து சில ஹார்மோன்கள் சுரக்கின்றன.
மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகளின் சரியான செயல்பாட்டிற்கு இந்த ஹார்மோன்கள் அவசியம்.
உடல் தனக்குக் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும் கதகதப்புடன் வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது.
தைராய்டு சுரப்பியில் சுரக்கும் T3, T4 ஆகிய ஹார்மோன்கள் வளர்சிதை மாற்றம், உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு அவசியம்.
நாம் உண்ணும் உணவு செரிமானமாவதில் இருந்து மூளையின் செயல்பாடு, நகங்கள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியம் என அனைத்தும் இந்த ஹார்மோனுடன் தொடர்புடையது.
இந்த தைராய்டு சுரப்பி செயலிழந்தால், இந்தச் சமநிலை பாதிக்கப்படலாம்.
எனவே இந்த தைராய்டு சுரப்பி என்பது உடலுக்கான ஒரு முக்கிய சுரப்பியாக உள்ளது. மனித உடலின் வளர்சிதை மாற்றம், வளர்ச்சி மற்றும் உருவாக்கத்திற்கு இந்த சுரப்பி அவசியமானதாக உள்ளது.
தைராய்டு ஹார்மோன்களை சரியான அளவில் சீராக வெளியிடுவதன் மூலம் உடலின் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்த இது உதவுகிறது.
நமது உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும் சூழல்களில் இந்த தைராய்டு சுரப்பி அதிக அளவிலான ஹார்மோன்களை உருவாக்குகிறது.
தைராய்டு குறித்துப் பொதுவாக இருக்கும் சில கேள்விகள் பற்றி பார்ப்போம்.
தைராய்டு என்பது பெண்களை மட்டுமே பாதிக்கக்கூடிய ஒரு நோயா?
தைராய்டு என்பது ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கக்கூடிய ஒரு நோயாகவுள்ளது. இருப்பினும் ஒப்பீட்டளவில் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்கள் மாதவிடாய் அல்லது பாலிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்று சொல்லக்கூடிய பிசிஓஎஸ் பிரச்னையுடன் வந்தால் முதலில் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்று பார்த்துவிடுவோம்.
ஆனால் ஆண்களுக்கு இம்மாதிரியாக பிரச்னைகள் இல்லை. தைராய்டு உள்ள ஆண்கள் பொதுவாக குண்டாக இருந்தால் தைராய்டு இருக்குமோ என்று யோசித்து பரிசோதனைக்கு வருகின்றனர்.
மாதவிடாய் சுழற்சியில் பிரச்னை என்பது எளிதாகத் தெரியும் ஓர் அறிகுறியாக இருப்பதால் பெண்கள் தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்படும்போது பல நேரங்களில் சற்று சீக்கிரமாகக் கண்டறிய முடிகிறது.
தைராய்டு பாதிப்பில் உள்ள இரண்டு வகைகள்?
பொதுவாக தைராய்டில் இரண்டு வகை உண்டு.
தைராய்டு ஹார்மோன் அளவு அதிகமாக இருந்தால்
‘ஹைப்பர் தைராய்டு’
என்று சொல்வோம்.
தைராய்டு ஹார்மோன் அளவு குறைவாக இருந்தால் அதை
‘ஹைபோ தைராய்டு’
என்று சொல்வோம்.
இதில் ஹைப்போ தைராய்டு பிரச்னை இருக்கும்போது பெண்களுக்கு பிசிஓடி போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதேபோல குழந்தையின்மை பிரச்னையையும் ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிக்கும். கழுத்தில் கட்டி உருவாகும்.
தைராய்டு என்பது நீரிழிவை போல் ஒரு வாழ்க்கைமுறை நோயா?
இல்லை.
தைராய்டு பிரச்னை என்பது தைராய்டு சுரப்பியை பொறுத்தது. முன்பெல்லாம் மலைப்பகுதியில் இருப்பவர்களுக்கு தைராய்டு அதிகம் ஏற்படுகிறது என்று சொல்வார்கள்.
அதேபோல அயோடின் குறைவாக இருந்தால் தைராய்டு வரும். ஆனால் அரசாங்கம் தற்போது அதுபோன்ற பிரச்னைகளைக் களைந்துவிட்டது.
இதைத் தாண்டி தைராய்டு என்பது குடும்ப மரபு வழியாகவும் வரலாம். தைராய்டு இருப்பதைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை, ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கேற்ப சிகிச்சைகள் கொடுக்கப்படும்.
தைராய்டு புற்றுநோய் என்றால் என்ன?
தைராய்டு சுரப்பியில் வரக்கூடிய புற்றுநோய் பிரச்னையை தைராய்டு புற்றுநோய் என்கிறார்கள்.
ஒரு சில தைராய்டு கட்டிகள்தான் புற்றுநோய் கட்டிகளாக மாறும். அதை ஸ்கேன் மூலம் கண்டறிந்துவிடலாம்.
அதேபோல எல்லா தைராய்டு கட்டிகளும் புற்றுநோய் கட்டிகளாக மாறுவதில்லை. நூற்றில் ஒன்றுதான் புற்றுநோய் கட்டியாக மாறும்.
அதையும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால் சிகிச்சை அளிக்க முடியும்.
“இந்தியா அயோடின் பற்றாக்குறை நிலையிலிருந்து, அயோடின் நிறைந்த நிலைக்கு மாறிவிட்டது.
15 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களிடம் தைராய்டு பாதிப்பு பெண்களில் 2 சதவீதமாகவும், ஆண்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவும் உள்ளது என தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பெண்களில் இந்தப் பாதிப்பு அதிகளவில் உள்ளது. 15 முதல் 19 வயது பெண்களிடம் இந்தப் பாதிப்பு 0.7 சதவீதமாகவும், 20 முதல் 34 ஆண்டு குழந்தைகளிடையே 1.8 சதவீதமாகவும், 35 வயது முதல் 49 வயது உள்ளவர்களிடம் 3.4 சதவீத அளவிலும் இந்த பாதிப்பு உள்ளது.
தமிழகத்தில் ஒரு லட்சம் பெண்களில் 4076 பேருக்கு இந்தப் பாதிப்பு உள்ளது,” எனத் தெரிவித்திருந்தார்.
இந்திய மாநிலங்கள் அளவில் பார்த்தால் தமிழகம் ஏழாவது இடத்தில் உள்ளது. அதிகப்படியாக கேரளாவில் ஒரு லட்சம் பெண்களில் 8,696 பேருக்கு இந்தப் பாதிப்பு உள்ளதாக பாரதி பிரவீன் பவார் வழங்கிய தகவலில் தெரிய வருகிறது.
----------------------------------------.