இயற்பியல் உலகம் போற்றும் தன்னிகரற்ற
நம்பிக்கை நாயகன்
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.
ஜனவரி 08 – 1942
உலகின் தலைசிறந்த அறிவியலாளர்
ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த தினம்
“வாழ்க்கை கடினம் தான், ஆனால், வெற்றிகரமான வழி அங்கே தான் இருக்கிறது”
- ஸ்டீபன் ஹாக்கிங்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்
ஓசூர். ஜனவரி. 08. –
உலக அண்டவியல் ஆராய்ச்சியின் அறிவழகன் ஸ்டீபன் ஹாக்கிங்
உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரும், இயற்பியல் உலகம் போற்றும் தன்னிகரற்ற நம்பிக்கை நாயகனுமான ஒரு விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.
மேல் வரிசையில் பற்கள் கிடையாது. கீழிருக்கும் சில பற்கள் மேல் உதட்டை அழுத்தி வெளிவந்து நிற்கும். தலை வலது பக்கம் சாய்ந்திருக்கும். நெற்றியை அதிகம் மறைக்காத மயிர். கேமராவும்,
சென்சாரும் பொருத்தப்பட்ட கண்ணாடி கம்யூட்டர் இணைக்கப்பட்ட வீல் சேர். மிகக் குறைவான எடை கொண்ட பொட்டலமாய் சுருண்டு உட்கார்ந்திருக்கும் அந்த உருவம். கன்னத்தில் சில
தசைகள் தவிர உடலின் அத்தனை பாகங்களும் செயலிழந்து போய்விட்டன. எந்தவொரு மனிதனும்
வாழவே முடியாத சூழல். ஆனால் அளப்பரிய சாதனைகளோடு சரித்திரம் படைத்த ஓர் அதி அற்புதன்.
இவ்வளவு வலிகளையும் கடந்து அவர் சிரிப்பார். எலும்போடு ஒட்டியிருக்கும் அவரின் கன்னத் தசைகள் சிறிய அசைவைக் கொடுக்கும். அது
அத்தனை அழகாய் இருக்கும். உலக அண்டவியல் ஆராய்ச்சியின் அறிவழகன் ஸ்டீபன் ஹாக்கிங்.
பீரங்கிகள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகளின் சத்தங்களுக்கு
மத்தியில் பிறந்த
ஸ்டீபன் ஹாக்கிங்
அது, இரண்டாம் உலகப்போர் சமயம், மருத்துவம் படிக்கும் பிராங்கும், தத்துவம் படிக்கும் இசோபெல்லும் காதல் வயப்படுகிறார்கள்.
கல்யாணம் செய்து கொள்கிறார்கள். எங்கும் போர்,
பீரங்கிகள், துப்பாக்கிகள், வெடிகுண்டுகளின் சத்தங்களுக்கு மத்தியில், அந்தக் குழந்தையின் அழுகுரல் அத்தனை இன்பமானதாய் அவர்களுக்கு இருக்கிறது. கருவறை கடந்து பூமியை எட்டிப்பார்த்த அந்தக் குழந்தை, எதிர்காலத்தில் அண்டம் கடக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்ற எண்ணம் துளியளவும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அது 1942-ம் ஆண்டு, ஜனவரி 8-ம் தேதி.
ஸ்டீபன் ஹாக்கிங் வளரத் தொடங்குகிறார்.
பள்ளியில் ஒரு சராசரி மாணவன் தான். ஆனால், ஏன்?, எப்படி? என்ற கேள்விகள் எதைப் பார்த்தாலும், எப்பொழுதும் அவனுள் எழுந்து கொண்டேயிருந்தது. அதற்கான விடைகளைத் தொடர்ந்து தேடத் தொடங்குகிறான். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உலகம் எப்படித் தோன்றியது என்ற பெரும் கேள்வி அவனுள் கனன்று கொண்டே இருந்தது.
1960- களில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் ALS எனப்படும்
Amyotrophic Lateral Sclerosis என்ற குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக அவரின்
உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின.
செயலிழக்கும் உறுப்புகளுக்கு ஈடான கருவிகளைத்
தானே உருவாக்கி, அதை ஈடுசெய்து வந்தார். ஒரு கட்டத்தில் பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்து விட்ட நிலையில், “ஈக்வலைஸர்” என்ற கம்ப்யூட்டர் புரோக்ராம் உதவியோடு கன்னத் தசைகளின் அசைவுகள் மூலம், கம்ப்யூட்டர் குரலில் பேசி வந்தார்.
இது, இவரின் அறிமுகம். இவரின் அடையாளங்கள்
அண்டவியல் ஆராய்ச்சிகள் தாம்.
டைம் மெஷின்(TimeMachine)
பிளாக் ஹோல்(BlackHole)
ஏலியன்(Alien)
பிக்பேங் தியரி(BigbangTheory)
என அண்ட அறிவியலின் பல மைல்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.
இமேஜினரி டைம்(ImaginaryTime)
என்ற கோட்பாட்டின் அடிப்படையில்,
இவர் எழுதிய
“காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்”
(A Brief History of Time)
என்ற புத்தகம், தமிழ் உட்பட 35 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தி யுனிவர்ஸ் இன் எ நட் ஷெல்
(The Universe in a nut shell),
மை ப்ரீஃப் ஹிஸ்டரி
(My Brief History),
உட்பட பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். ஹாலிவுட்டின் பல படங்கள், இவரின் கோட்பாடுகளைத் தழுவியே எடுக்கப்படுகின்றன.
கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்த தோழி, ஜேன் வைல்டை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். 30 வருடங்கள் இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர் தன்னை கவனித்துக் கொண்ட செவிலியர் எலைனுடன் காதல் கொண்டு, அவரைத் திருமணம் செய்து கொண்டு, பத்தாண்டுகள் அவரோடு வாழ்ந்தார். உடல் இச்சைகள் கடந்த அழகான காதலாக அந்தக் காதல் இருந்தது.
எளிய மனிதர்களின் குரலுக்காக, குரலே இல்லாத நிலையிலும் குரல் கொடுத்தார்
பாலஸ்தீனர்களுக்கு எதிரான
அநீதிகளை எதிர்த்து
இஸ்ரேலில் பங்கேற்க வேண்டிய மிக முக்கிய அறிவியல் கூட்டத்தைப் புறக்கணித்தார். வியட்நாம் மீதான போர், இராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு என தன் வீல்சேரில் பயணித்தபடியே
எளிய மனிதர்களின் குரலுக்காக, குரலே இல்லாத நிலையிலும் குரல் கொடுத்தார்.
ஸ்டீபன் மனித சமுதாயத்திற்கு மிக முக்கிய எச்சரிக்கை மணியை அடிக்கிறார்.
“நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும், இந்த பூமியைப் பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம். இந்த பூமி இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்றுக் கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் இது.”
“மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நொடியையும் ரசித்து பெரும் ஈடுபாட்டோடு மனித இன
தொடர்ச்சிக்காகப் போராடிக்
கொண்டிருக்கிறேன்.
வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும்,
வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது.
நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன்.
அதன் மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்”
என உறுதிபடக் கூறுகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.