மரம் என்பது பூமிக்கு
பாரமான உயிரினம் இல்லை.
அது தன்னுடைய ஒவ்வொரு உறுப்பாலும்,
இந்த பூமியை ஜீவனோடு
வைத்திருக்க உதவும் கருப்பொருள்.
மே – 22 –
பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள்
(International Day for Biological Diversity)
"Harmony with nature and sustainable development"
"இயற்கையுடன் நல்லிணக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி "
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மே. 22. –
உலக பல்லுயிர் தினம்,
மனிதர்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய ஒவ்வொரு நாளின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அதற்காகவே பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கவும், அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு கருப்பொருளுடன் தொடர்பு படுத்தி சிறப்பு தினங்கள் கடை பிடிக்கப்படுகின்றன.
இதில் உலக பல்லுயிர் தினம், இயற்கைக்கும், மனித வாழ்வுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி பரவலாகக் காணப்படுவதே பல்லுயிர் பெருக்கம்.
மே 22-ம் தேதி உலக பல்லுயிர் பெருக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகில் ஒவ்வொரு உயிரினத்தையும் அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியாக, இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வெப்ப நாடான
இந்தியாவின் சிறப்பே
‘பல்லுயிரின பாதுகாப்பு நாடு’
என்பதுதான்.
மரம்,
செடி,
கொடி,
பாலூட்டி,
ஊர்வன,
பறப்பன,
நீர்,
நில வாழ்
என பல்வேறு உயிரினங்கள் வாழத்தகுதியான நிலப்பரப்பு நம்முடையது.
தமிழகத்தில்
நீலகிரி,
ஆனை மலை,
பொதிகை மலை
போன்ற மலைப் பிரதேசங்கள் கொண்ட
மேற்குத் தொடர்ச்சி மலை,
ஏரிகள்,
ஆறுகள்,
கழிமுகங்கள்,
சதுப்பு நிலங்கள்
போன்ற பல்வேறு விதமான புவியியல் அமைப்புகள் கொட்டிக் கிடக்கும் இயற்கை வளங்களில் பல்வகை உயிர்கள் சுதந்திரமாக வாழ்கின்றன.
நமது பொறுப்பற்ற நடவடிக்கையால் தற்போது கிடைப்பதற்கரிய இயற்கையை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகிறோம்.
முன்னோர்கள் வளர்த்த, பார்த்த பல தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் இப்போது இல்லை.
அவற்றின் பெயர்கள் கூட இன்றைய சந்ததியினருக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
தேவைக்கேற்ப இயற்கையைப் பயன்படுத்த வேண்டும். பேராசைக்கு இயற்கையை சுரண்டக் கூடாது. தற்போது மனிதர்கள் உணவை கொஞ்சமாகவும், மாத்திரைகளை அதிகமாகவும் எடுத்துக்கொள்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இயற்கை வளம் என்பது வங்கியில் சேமிக்கும் பணம் போன்றது. அதன் வட்டியை மட்டும் எடுத்து பயன்படுத்தினால் நமது பணம் அப்படியே இருக்கும்.
வாழ்நாள் முழுமைக்கும் வாழ்வாதாரமாக அது நம்மை பாதுகாக்கும். பணத்தை மொத்தமாக எடுத்து செலவழித்தால் என்ன நிலைமை ஏற்படுமோ அதே கதிதான் இயற்கையை மொத்தமாக பயன்படுத்தினால் ஏற்படும்.
பல்லுயிரினம் பாதித்தால்
மரம் என்பது பூமிக்கு பாரமான உயிரினம் இல்லை. அது தன்னுடைய ஒவ்வொரு உறுப்பாலும், இந்த பூமியை ஜீவனோடு வைத்திருக்க உதவும் கருப்பொருள். பறவைகளும், விலங்குகளும் அதேபோலத்தான். இந்த கருப்பொருட்களை பாதுகாக்காவிட்டால் தற்போது பூமியில் அதிகரித்து வரும் கொசுக்களின் உற்பத்தியை வெகுவாகக் குறைக்கும் தலைப்பிரட்டைகள் காணாமல் போகும்.
மலேரியா, டெங்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் முன்பை விட வேகமாக பரவி மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பெரிய ஏரிகளிலும், குளங்களிலும் பறவைகள் தென்பட்டால்தான் அந்த நீர் பயன்படுத்துவதற்கு உகந்தது.
ஆனால், மனிதர்களால் கழிவும், குப்பையுமாகக் காணப்படும் ஆறுகளுக்கும், ஏரிகளுக்கும் பறவைகள் எப்படி வரும்.
இயற்கை சிலந்தியைப் போன்றது. ஒரு இழையைத் தட்டினாலும் மொத்த இடத்திலும் அதிர்வு ஏற்படும்.
எனவே, உலகில் எங்காவது ஓரிடத்தில் இயற்கையை அழித்தாலும், அது மொத்த பல்லுயிரினம் கொண்ட இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
-----------------------------------.