உலகில் தொழிற்புரட்சிக்கு
வித்திட்ட நவீன நீராவி
இயந்திரம் கண்டுபிடித்த
சாதனையாளர் ஜேம்ஸ் வாட்
ஜனவரி – 19 – 1736 - நீராவி இயந்திரம் கண்டுபிடித்த “ஜேம்ஸ் வாட்”
289 -வது பிறந்ததினம்.
“ஜேம்ஸ் வாட் - மனுகுலத்திற்கு அவரது கண்டுபிடிப்பைக் கவுரவப்படுத்தவே மின்சாரத்தைக் கணக்கிடும் முறைக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது”.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜனவரி. 19. –
ஜேம்ஸ் வாட்
'Bulb' எனப்படும் மின்விளக்குகளை வாங்கிய அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கும். அப்படி வாங்கும்போது எத்தனை வாட் (Watt) சக்தி கொண்ட விளக்குகள் வேண்டும் என்று கேட்டு வாங்கியிருப்பீர்கள். வாட் (Watt) என்பது மின்சாரத்தைக் கணக்கிடும் ஓர் அளவு முறை. 'வாட்' என்பது வரலாற்றில் ஒரு மிகமுக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் ஒரு கண்டுபிடிப்பாளரின் பெயரும்கூட. மனுகுலத்திற்கு அவரது கண்டுபிடிப்பைக் கெளரவப்படுத்தவே மின்சாரத்தைக் கணக்கிடும் முறைக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.
அப்படி என்ன முக்கியமான கண்டுபிடிப்பை அவர் செய்திருக்கிறார் என்று நீங்கள் யோசிக்கலாம்!
உலகம் தொழில்மயமாவதற்கு உதவிய ஓர் அபூர்வ கண்டுபிடிப்பு.
அவரது கண்டுபிடிப்பு பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த 'Industrial Revolution' எனப்படும் தொழிற்புரட்சிக்கு ஆணி வேராக இருந்த ஒரு கண்டுபிடிப்பு. இயந்திர சக்தியின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய ஓர் அற்புத கண்டுபிடிப்பு, உலகம் தொழில்மயமாவதற்கு உதவிய ஓர் அபூர்வ கண்டுபிடிப்பு.
நீராவி இயந்திரம் ('Steam Engine')
'நீராவி' என்ற இயற்கை சக்திக்கு கடிவாளமிட்டு அதனை மகத்தான சக்தியாக மனுகுலத்துக்கு தந்த அந்த வரலாற்று நாயகர் ஜேம்ஸ் வாட். அவர் கண்டுபிடித்துத் தந்த கருவி 'Steam Engine' எனப்படும் நீராவி இயந்திரம்.
1736-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் நாள் ஸ்காட்லாந்தில் பிறந்தார் ஜேம்ஸ் வாட். அவரது குடும்பம் ஏழ்மையான குடும்பம். அந்தக்கால கட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஸ்காட்லாந்தில் அடிக்கடி ஆக்கிரமிப்பு செய்ததால் நாட்டின் பொருளாதாரமும் மோசமான நிலையில் இருந்தது. பிறந்ததிலிருந்தே உடல் ஆரோக்கியமில்லாமல் இருந்தார் ஜேம்ஸ் வாட். எப்போதும் இருமிக் கொண்டே இருப்பார் ஸ்காட்லாந்தில் குளிர்காலம் வந்தால் அவரது நிலை இன்னும் மோசமாகும். அந்த நேரங்களில் அவரை பள்ளிக்கு அனுப்ப மாட்டார் தாயார். பள்ளிக்கு சென்ற நாட்களில் அவருக்கு 'geometry' என்ற கணிதக்கூறில் அதிக ஆர்வம் இருந்தது. பிந்நாளில் அவர் பொறியியலில் சிறந்து விளங்க அது ஒரு முக்கிய காரணம்.
மனுகுலம் தேடி வந்த அந்த சக்தி நீராவிதான் என்பதை உலகுக்கு
நிரூபித்தவர் ஜேம்ஸ் வாட் எந்த வேலையை செய்யவும் காற்று, நீர், விலங்குகள் ஆகியவற்றின் சக்திகள் தேவைப்பட்டன. இவற்றுக்கும் மேலாக ஒரு சக்தி தேவை என்ற தவிப்பு மனுகுலத்துக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது. மனுகுலம் தேடி வந்த அந்த சக்தி நீராவிதான் என்பதை உலகுக்கு நிரூபித்தவர் ஜேம்ஸ் வாட்.
அவருக்கு முன்பாகவே
1698-ஆம் ஆண்டு
தாமஸ் சவேரி
என்பவர் நீராவியைக் கொண்டு தண்ணீரை இறைக்கும் ஓர் எளியக் கருவிக்கான காப்புரிமம் பெற்றிருந்தார்.
அந்தக் கருவியில் சில மாற்றங்களை செய்து சற்று மேம்பட்ட நீராவி இயந்திரத்தை 1712-ஆம் ஆண்டு உருவாக்கினார்,
தாமஸ் நியூக்கோமன்
என்ற ஆங்கிலேயர். ஆனால் அவையெல்லாம் நிலக்கரி சுரங்கத்திலிருந்து தண்ணீரை இறைக்கும் அளவுக்குதான் சக்தி கொண்டவையாக இருந்தன.
1764-ஆம் ஆண்டு தாமஸ் நியூக்கோமனின் நீராவி இயந்திரத்தை பழுது பார்க்கும் வாய்ப்பு ஜேம்ஸ் வாட்டிற்கு கிட்டியது. அப்போதுதான் அவருக்கு நீராவி சக்தியின் மீது ஆர்வம் ஏற்பட்டது. படிப்பு முடிந்து லண்டனுக்கு வந்த ஜேம்ஸ் வாட் ஓராண்டுக்கு விஞ்ஞானக் கருவிகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் பயிற்சி பெற்றார்.
பின்னர் ஸ்காட்லாந்து திரும்பிய அவருக்கு கிளாஸ்கோ (University of Glasgow) பல்கலைக்கழகத்தில் இயந்திரக் கருவிகள் தயாரிக்கும் பொறுப்பு கிட்டியது. அப்போது தாமஸ் நியூக்கோமன் உருவாக்கியிருந்த நீராவி இயந்திரத்தை பழுது பார்த்துத் தருமாறு பல்கலைக்கழகம் அவரைக் கேட்டுக்கொண்டது. அந்தக் கருவியில் நிறைய குறைகள் இருந்ததை உணர்ந்தார் ஜேம்ஸ் வாட். குறிப்பாக அதிக சக்தியை விரயமாக்கியது.
ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்துத் தந்த நீராவி இயந்திரம் மனுகுலத்திற்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.
விஞ்ஞானக் கருவிகள் செய்யும் பயிற்சியும், இயற்கையிலேயே அவருக்கு இருந்த கற்பனை சக்தியும் கைகொடுக்க ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தில் பல முக்கியமான மாற்றங்களை செய்தார்.
1781-ஆம் ஆண்டு சக்கரம் பொருத்தப்பட்ட ஓர் அமைப்பையும், பிஸ்டனை மேலும் கீழும் இயக்கும் ரோட்டரி முறையையும் உருவாக்கி காப்புரிமம் பெற்றார்.
அந்த மாற்றங்களால் அந்த இயந்திரத்தின் சக்தி பன்மடங்கு பெருகியது. அந்த மாற்றங்களைக் கொண்டு வர கடுமையாக உழைத்தார் ஜேம்ஸ் வாட். சிறு வயதிலிருந்தே அவர் ஆரோக்கியமற்று இருந்ததால் அந்தக்கால கட்டத்திலும் அவர் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். வேலையில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இருப்பினும் அவர் மனம் தளரவில்லை.
நீராவி இயந்திரத்தை மட்டுமின்றி வேறு சில கண்டுபிடிப்புகளையும் செய்தார் ஜேம்ஸ் வாட்.
இயந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும்
'centrifugal governor'
என்ற கருவியையும்,
'pressure age'
என்ற அழுத்தமானியையும்
அவர் கண்டுபிடித்தார்.
ஜேம்ஸ் வாட் கண்டுபிடித்துத் தந்த நீராவி இயந்திரம் மனுகுலத்திற்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. பல தொழில்களுக்கு உகந்தவாறு நீராவி இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன.
தொழிற் புரட்சி
அதுவரை மனிதன் மற்றும் விலங்குகளின் தசை வலிமையையே நம்பியிருந்தது தொழில் உலகம். ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரம் வந்த பிறகு நெசவாலைகள் முதல் உற்பத்தி ஆலைகள் வரை இயந்திரமயமாயின. உற்பத்தி பன்மடங்கு பெருகியது. அதனால்தான் 'Industrial Revolution' எனப்படும் தொழிற்புரட்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தவர் என்று ஜேம்ஸ் வாட்டை பெருமைப்படுத்துகிறது வரலாறு.
குதிரை சக்தி( 'Horsepower') நீராவி இரயில்கள் நிலப்பரப்புகளை வெற்றி கண்டன. 'Horsepower' என்ற அளவு முறையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த அளவு முறையை உலகுக்குத் தந்தவரும் ஜேம்ஸ் வாட்தான். ஒரு இயந்திரம் செய்யும் வேலையை ஓர் குதிரையின் சக்திக்கு ஒப்பிட்டுப் பார்க்கும் முறைதான் அது.
வாழ்நாள் முழுவதும் கிட்டதட்ட நோயாளியாகவே வாழ்ந்த ஒரு மனிதனால் மனுகுலத்திற்கு எவ்வுளவு பெரிய சக்தியைக் கொடுக்க முடிந்திருக்கிறது பார்த்தீர்களா? வறுமையும் நோயும் அவரது தன்னம்பிக்கைக்கும், உழைப்புக்கும் தடைபோட முடியவில்லை. ஜேம்ஸ் வாட்டைப்போல தடைகளைக் கண்டு தயங்காமல் தன்னம்பிக்கையோடு உழைக்கும் எவருக்கும் எப்போதும் எந்த வானமும் வசப்படும்.
-----------------------------------------------